சேந்தமங்கலம்: மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சிலர் சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும், தேர்வில் தோல்வியடைய செய்துவிடுவேன் என மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் பல இடங்களில் புகார்கள் எழுகின்றன. சில்மிஷ ஆசிரியர்களை கண்டித்து போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது டிஸ்மிஸ் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சிலமிஷ புகாரில் சிக்கிய ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர் சத்யபிரபு (28). இவர், பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. சக ஆசிரியைகளிடமும் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியர் சத்யபிரபு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது ஆசிரியர் சத்யபிரபுவின் செயல்பாடுகள் பற்றி அனைவரும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தொடக்கக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் சத்யபிரபுவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த விளக்கத்தை குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை டிஸ்மிஸ் செய்யும்படி தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டார். அதன்படி, ஆசிரியர் சத்யபிரபுவை டிஸ்மிஸ் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து டிஇஓ அருள்மொழி தேவி கூறும்போது, ‘‘பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். ஏழை மாணவர்கள், பணக்கார குழந்தைகள் என ஆசிரியர்கள் பிரித்து பார்க்கக் கூடாது. உடலளவிலோ மனதளவிலோ குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஒரு ஆசிரியரே நடந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரை டிஸ்மிஸ் செய்துள்ளோம்’’ என்றார். ஏற்கனவே கல்வி உதவித் தொகை மோசடியில் நாமக்கல் மாவட்ட தலைமை ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், செக்ஸ் டார்ச்சர் புகாரில் ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது கல்வித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர் சத்யபிரபுவின் மனைவி சங்கீதா, புதன்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவருக்கும் சக நர்ஸ் வசந்தகுமாரி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற சத்யபிரபு, வசந்தகுமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து சத்யபிரபுவை கைது செய்தனர். அவரை நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதனால், உதவி தொடக்க கல்வி அலுவலர் சிறைக்கு சென்று சத்யபிரபுவிடம் டிஸ்மிஸ் உத்தரவை வழங்கினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook