ஆகஸ்ட் 1 முதல் சரக்கு விலை 15% அதிகரிப்பு
ஐதராபாத்: வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆந்திராவில் நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களின் விலை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. மதுபானங்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என கடந்த சில மாதங்களாக உற்பத்தி நிறுவனங்கள் ஆந்திர அரசிடம் கோரிக்கை வைத்தன. இதுதொடர்பாக மாநில அரசு நியமித்துள்ள விலை நிர்ணய கமிட்டி நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களின் விலையை 15 சதவீதம் வரை உயர்த்த அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. மலிவு ரக மதுபானங்கள் மற்றும் பீர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுதொடர்பான அறிக்கை நேற்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சில தினங்களில் இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் குவார்ட்டர் பாட்டில் குறைந்தது ரூ.10 அதிகரிக்கும் என தெரிகிறது.