புதுடெல்லி: உப வரி விதிப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய பெட்ரோலிய பொருட்களை மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில், இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதில் பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை மட்டும் எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மாதத்துக்கு இரண்டு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து சந்தை நிலவரத்துக்கேற்ப உயர்த்தி வருகின்றன. நேற்று முன்தினம் லிட்டர் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்த்தப்பட்டது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. இவற்றை குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறிவருகின்றன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. துணை ஜனாதிபதி தேர்தல், அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. அதற்கு மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. எனவே, 7ம் தேதிக்கு முன்னதாக விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வந்தன.
இந்நிலையில், விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது என பெயர் வெளியிட விரும்பாத மூத்த அமைச்சர் ஒருவரும், எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரும் தெரிவித்தனர். பெட்ரோல் விலையை 70 காசு உயர்த்தியதற்கே கூட்டணி கட்சியான திரிணாமுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு ஒருபோதும் மம்தா சம்மதிக்க மாட்டார். தற்போது காங்கிரசுக்கு சரத்பவாரும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். எனவே, துணை ஜனாதிபதி தேர்தல் வரை விலை உயர்வு குறித்து மத்திய அரசு யோசிக்காது. 7ம் தேதிக்கு பின்னர் நாடாளுமன்ற கூட்டதொடர் ஆரம்பிக்க உள்ளதால், அந்த காலகட்டத்திலும் விலை உயர்வு அறிவிப்பு இருக்காது. பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அமைச்சர் குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஜனாதிபதியாகிவிட்டார். அமைச்சர் குழுவுக்கு புதிய தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது என்று அவர்கள் கூறினர். இதற்கிடையே, பெட்ரோல் மீதான உப வரி விதிப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 முதல் 90 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 12 காசுகளும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.4 முதல் 10 வரையும் குறைக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook