புதுடெல்லி: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதிபா பாட்டீல் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. இதில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பாஜ மற்றும் அதிமுக ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடந்தது. சங்மாவைவிட 4 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்ற பிரணாப், காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார். கருப்பு நிற ஷெர்வானியும், வெள்ளை பேன்ட்டும் அணிந்திருந்தார். முன்னாள் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது சமாதிகளிலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் கமல்நாத் சென்றார். பின்னர் ராஷ்டிரபதி பவன் சென்ற பிரணாப், ஓய்வுபெற்று செல்லும் பிரதிபா பாட்டீலை சந்தித்தார். இருவரும் சம்பிரதாய முறைப்படி நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். நாடாளுமன்ற வாசலில் துணை ஜனாதிபதி அன்சாரி, சபாநாயகர் மீரா குமார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா ஆகியோர் பிரணாப்பை வரவேற்றனர். வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. விழா மண்டபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முப்படை தளபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். விழாவின் தொடக்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சரியாக காலை 11.35 மணிக்கு நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரணாப், கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது 21 குண்டுகள் முழங்க, அவருக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர், பதவியேற்பு பதிவேட்டில் பிரணாப் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து பிரதிபா பாட்டீலும் பிரணாப் முகர்ஜியும் தங்களது இருக்கையை மாற்றிக் கொண்டனர். புதிய ஜனாதிபதி பிரணாபுக்கு பிரதமர், சோனியா மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்புக்கு பின்னர் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, ‘‘நமது அரசியலமைப்பு சட்டத்தை நடுநிலையுடன் பாதுகாப்பேன். நவீன இந்தியாவின் அகராதியில் இருந்து வறுமை என்ற சொல்லை அகற்ற வேண்டும். இந்தியாவில் மீண்டும் பொற்காலத்தை கொண்டு வர கல்வியால்தான் முடியும். எல்லோருக்கும் கல்வியறிவு கிட்ட வேண்டும். ஜனாதிபதியாக பாரபட்சமற்ற முறையில் செயல்படுவேன். நமது ராணுவம் மற்றும் காவல் துறையினரின் வீரத்தை எண்ணி பெருமை கொள்கிறேன்’’ என்றார். விழா முடிந்ததும் புதிய ஜனாதிபதி பிரணாபும், பிரதிபா பாட்டீலும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து வாத்தியங்கள் முழங்க ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து டெல்லியில் உள்ள தற்காலிக இல்லத்துக்கு பிரதிபா புறப்பட்டு சென்றார். அவரை வீடு வரை சென்று பிரணாப் முகர்ஜி வழியனுப்பி வைத்தார். பதவியேற்பு விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்திலும் ராஷ்டிரபதி பவனிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook