மும்பை :யார் படுக்கை அறையிலும் நான் எட்டிப் பார்ப்பதில்லை. அதுபோல் நடிகர், நடிகைகளின் படுக்கை அறையை எட்டிப் பார்க்காதீர்கள் என்றார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா கூறியதாவது: பெரும்பாலானவர்கள் என்னுடைய சொந்த வாழ்க்கையை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அதுபற்றி நான் பேச தவிர்ப்பதுதான். சொந்த விஷயங்களில் எதை சொல்ல வேண்டுமோ அதை சரியான நேரத்தில் இன்டர்நெட் மூலமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். நடிகையாக இருப்பதால் என்னைப்பற்றிய கற்பனைகளை தவிர்க்க முடியவில்லை. அது வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. நான் விரும்பி எதுவும் வருவதில்லை. என்னை அதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண் என்பதால் இவைகளைப்பற்றி வருந்த வேண்டி உள்ளது. யாருடைய படுக்கை அறையிலும் நுழைந்து நேற்று இரவு என்ன நடந்தது என்று நான் பார்ப்பதில்லை. அதுபோலவே மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பிரபலமாக இருப்பவர்களுக்கு இப்பிரச்னை வருவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் நாங்களும் மனிதர்கள்தான். இதை உணர்ந்து மற்றவர்களே தங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையை என்னுடைய எண்ணப்படி வாழ்கிறேன். ஒருபோதும் மற்றவர்களிடம் பிரச்னை செய்தது கிடையாது. பாலிவுட்டை பொறுத்தவரை கோஷ்டிகள் இருக்கின்றன. எனவே மக்களும் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுபோன்ற கோஷ்டிகளில் நான் கிடையாது. காரணம் தெரியாமலே படங்களில் இருந்து பலமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன். யாரும் எனக்கு பின்பலமாக இருந்ததில்லை. அதுபோல் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படும்போதும் அதற்காக காரணம் தெரியாது. கடின உழைப்புக்கு ஆண்டவன் தரும் பரிசாக நினைக்கிறேன். என் வாழ்க்கையை விதிமுறைகளுடன் வாழ்கிறேன். அப்படி வாழ்வதால் நான் திமிர் பிடித்தவள் கிடையாது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook