லண்டன்: ‘அச்சச்சோ.. செல்போன் இல்லாவிட்டால் என்ன ஆகுமோ’ , இந்த பயம் 66 சதவீதம் பேரை ஆட்டிப் படைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சட்டை, பேன்ட் பாக்கெட்டில் பணம், பேனா, அத்தியாவசிய மாத்திரை, சில்லறை காசு இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டுதான் வெளியே புறப்படுவார்கள். செல்போன் வந்த பிறகு இது மாறிவிட்டது. செருப்பை போட்டு வாசல்படி தாண்டும்போது, செல்போன் இருக்கிறதா என்றுதான் கை முதலில் தொட்டுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்துகிறது. மாறிவரும் இந்த பழக்கம் தொடர்பாக இங்கிலாந்தின் ரீடிங் நகரை சேர்ந்த ‘செக்யூர் என்வாய்’ என்ற அமைப்பு ஒரு சர்வே நடத்தியது.
சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு வினாடிகூட செல்போனை பிரிந்து இருக்க முடியாது என்ற நிலையில் சராசரியாக 66 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இந்த பயமும் பீதியும் ‘நோமொஃபோபியா’ (நோ மொபைல் போன் ஃபோபியா) எனப்படுகிறது. செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது தங்கள் போனில் உள்ள தகவல், மெசேஜ், படங்களை பார்த்து விடுவார்களோ என போன் தொடர்பான கவலைகளும் பயமும் அவர்களுக்கு எந்நேரமும் இருக்கிறது. இந்த பாதிப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு 53 சதவீதம் பேருக்கு இருந்தது. தற்போது 66 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்கள்தான் அதிகம். 18 , 24 வயதினர் 77 சதவீதம் பேரும், 25 , 34 வயதினர் 68 சதவீதம் பேரும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். பாத்ரூமில் பேப்பர் படிக்கும் வழக்கம் ஒரு காலத்தில் பலருக்கும் இருந்தது. அந்த இடத்தை தற்போது செல்போன் பிடித்திருக்கிறது. 75 சதவீதம் பேர் செல்போனுடன்தான் பாத்ரூமுக்குள் நுழைகின்றனர். தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சை பார்ட்னர்கூட (காதலன், காதலி, கணவன், மனைவி) பார்க்க கூடாது என்று 49 சதவீதம் பேர் நினைக்கின்றனர். 46 சதவீதம் பேர் சீக்ரெட் லாக் கோட் பயன்படுத்துகின்றனர். ஆபீசுக்கும் தனிப்பட்ட உபயோகத்துக்கும் தனித்தனி செல் வைத்திருப்பவர்கள் 58 சதவீதம் பேர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook