ஆந்திர இடைத்தேர்தலையொட்டி ரூ3.35 கோடி பறிமுதல்
ஐதராபாத் :ஆந்திராவில் இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில், கணக்கில் காட்டாத பணம் ரூ.3.35 கோடி இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சிக்கு தாவிய 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. சிரஞ்சீவி மாநிலங்களவை உறுப்பினரானதை தொடர்ந்து திருப்பதி தொகுதி எம்எல்,ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த 18 தொகுதிகளுக்கு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தேர்தல் கமிஷனர் வினோத் ஜட்ஸி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி பன்வார்லாலுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் 12 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், இடைத்தேர்தல் பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்வார்லால் கூறுகையில், ‘இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில், இதுவரை கணக்கில் காட்டாத பணம் ரூ.3.35 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் 3,200 ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்றார். இதற்கிடையில், மாநில டிஜிபி தினேஷ் ரெட்டியும் இடைத்தேர்தல் தொடர்பாக போலீஸ் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.