கொலம்பஸ் :அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பாரக் ஒபாமா, முறைப்படி தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபரானார் பாரக் ஒபாமா. இவரது பதவிக் காலம் முடிவதை அடுத்து வரும் நவம்பர் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தேர்தல் பிரசாரத்தை ஒபாமா நேற்று முறைப்படி தொடங்கினார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, நம்மால் முடியும் என்ற ஸ்லோகத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்ந்தவர் ஒபாமா. ஆனால், இப்போது அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். இதனால் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்,
முன்னேறு என்ற ஸ்லோகத்துடன் ஓகியோவில் பிரசாரத்தை தொடங்கினார் ஒபாமா. அப்போது அவர் பேசுகையில், கடும் பொருளாதார சிக்கலில் அமெரிக்கா இருந்த போது நான் அதிபர் பதவி ஏற்றேன். பல பிரச்னைகள் எழுந்தாலும் எங்கும் நான் ஓடிவிடவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர் ரோம்னி, தவறான யோசனைகளை கூறி பிரசாரம் செய்கிறார். நடுத்தர வர்க்கத்தினரை பற்றி அவர் கவலைப்படவில்லை. பணக்காரர்களுக்கு சாதகமான திட்டங்களை கூறி பிரசாரம் செய்கிறார். அவற்றை நம்பாதீர்கள். அமெரிக்காவுக்கு இது வெறும் தேர்தல் அல்ல. நாட்டின் பொருளாதாரம் மக்களின் முன்னேற்றம் பற்றிய விஷயம். எனவே, ரோம்னிக்கு வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள் என்றார். ஒபாமாவின் மனைவி மிச்செல்லும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் ஒபாமா. அவருக்கு குடும்ப கஷ்டம் தெரியும். அவர் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்றார். பின்னர் விர்ஜினியா நடந்த பொதுக் கூட்டத்திலும் ஒபாமா பிரசாரம் செய்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook