அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் : சசிகலா தம்பி திவாகரன் விடுதலை
திருச்சி :அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால், 3 மாத சிறைவாசத்துக்கு பின் திவாகரன் நேற்று விடுதலையானார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சசிகலா தம்பி திவாகரன் தூண்டுதல்பேரில் சிலர் இடித்ததாக போலீசில் புகார் செய்தார். நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பிப்ரவரி 2ம் தேதி திவாகரனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் மீது நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே 5 வழக்குகளில் ஜாமீன் பெற்ற திவாகரனுக்கு, மற்ற 2 வழக்குகளிலும் கடந்த 2ம் தேதி ஐகோர்ட் கிளை ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர் 3 மாத சிறைவாசத்துக்கு பின் நேற்று மாலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். திவாகரனை படம் பிடிக்க சிறையின் முன்பக்க கதவு பகுதியில் போட்டோகிராபர்கள் காத்திருந்தனர். இதனால் சிறையில் மாற்று வழியில் அவரை சிறை அதிகாரிகள் அனுப்பினர். அங்கு தயாராக இருந்த காரில் ஏறி திவாகரன் சென்றார்.