குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும்
மும்பை :பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியை தூக்கில் போட வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் இருந்தவர் அபிஷேக் சிங்வி. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தனது பெண் உதவியாளருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடிக்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவரிடம் பணிபுரிந்த டிரைவர் இந்த சிடியை வெளியிட்டது தெரியவந்தது. இது போலி என அபிஷேக் மறுத்தார். டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சிடி வெளியிட தடை வாங்கினார்.
இதற்கிடையே காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று நிலைக்குழு தலைவர் பதவி மற்றும் செய்தி தொடர்பாளர் பதவிகளை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் வலுவான லோக் ஆயுக்தா வலியுறுத்தி சுற்றுப்பயணம் செய்து வரும் அன்னா ஹசாரேவிடம் அபிஷேக் சிங்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆவேசமாக பதில் அளித்த அன்னா, ‘அபிஷேக் சிங்வி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கில் போட வேண்டும்’ என்றார். வலுவான லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஊழல்பேர்வழிகள் இந்நேரம் சிறையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.