நாகர்கோவில் :குமரி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது சிலிண்டர் மாறி சிகிச்சை அளித்ததால், கோமா நிலைக்கு சென்ற ருக்மணி ஓராண்டுக்கு பின் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ருக்மணி (34). இவர் கடந்த 19.3.2025 அன்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக , ஆசாரிபள்ளத்தில் உள்ள குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த அறுவை சிகிச்சையின் போது ருக்மணிக்கு ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில், நைட்ரஸ் ஆக்ஸைடு சிலிண்டர் பொருத்தினர். சில நிமிடங்கள் கழிந்த பிறகே சிலிண்டர் மாறிய தகவல் தெரிய வந்து, உடனடியாக அந்த சிலிண்டரை கழற்றி விட்டு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தினர். அதற்குள் ருக்மணி கோமா நிலைக்கு சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் முத்து செண்பகம், எட்வர்ட் ஜான்சன், மகேஸ்வரி, நர்சுகள் அனிதா, விஜயகுமாரி, மருந்தாளுனர்கள் சிவகலை, எசிடோர், சண்முகசுந்தர நாயகி ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டனர். கோமா நிலையில் இருந்த ருக்மணி, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் ஒரு வருட காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலை தொடர்ந்து மோசம் ஆனது. இதற்கிடையே ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த மார்ச் மாதம் ருக்மணியை உயர் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ருக்மணி பரிதாபமாக இறந்தார்.
யார் பொறுப்பு? இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் பணிக்கு சேர்ந்து விட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் போய் விட்டது. குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த ருக்மணி, தனது குழந்தைகளை கூட பார்க்க முடியாமல் ஒன்றரை ஆண்டுகளாக வெறும் பொம்மையாகவே இருந்து உயிர் இழந்ததற்கு யார் பொறுப்பு? ஏழையாக இருந்து அரசு மருத்துவமனையை நம்பி போன எங்களுக்கு இந்த கதியா? என ருக்மணியின் கணவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook