சென்னை :ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனி மாவட்டத்துக்கு காரில் கஞ்சா கடத்துவதாக காஞ்சிபுரம் எஸ்பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் தலைமையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ஓட்டேரி எஸ்ஐ ரகுநாதன், எஸ்ஐ கோவிந்தசாமி, ஏட்டு பார்த்தசாரதி ஆகியோர், இன்று அதிகாலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வந்த சுமோ ஒன்று, போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீசார் துரத்திச் சென்று காரை மடக்கினர். அதில் இருந்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து துப்பாக்கி முனையில் 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். காரில் இருந்து 119 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டும் 2 கிலோ 200 கிராம் இருந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனி பகுதியை சேர்ந்த மதன் (20), ஈஸ்வரன் (20), பழநியை சேர்ந்த சக்திவேல் ராஜன் (30), ஆறுமுகம் (24) என்பதும் இவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள செல்வம் என்பவருக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் அன்னவரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook