கூடுவாஞ்சேரி :காரணைபுதுச்சேரி ஊராட்சியில் 2 ஏரிகள் பிளாட் போட்டு பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைபுதுச்சேரி ஊராட்சிக்குட்பட்ட காட்டூர் அண்ணாநகரில் ஈசா என்ற பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி, 157 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து குடிசை, மாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், சிலர் முள் வேலி அமைத்து பிளாட் போட்டு ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சம் என அமோகமாக விற்று வருகின்றனர். 2 இடத்தில் பில்லர் கட்டப்பட்டு கூடுவாஞ்சேரி மின் வாரியம் மூலம் மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
பெரியார் நகரில் 62 ஏக்கரில் உள்ள ஏரி, பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமானது. இங்கு பலர் வீடுகள் கட்டி வருகின்றனர். ஏரியில் மணல் கொட்டப்பட்டு அடுக்குமாடி வீடும் கட்டி வருகின்றனர். மேலும், லேஅவுட் போட்டு ஒரு சென்ட் நிலம் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏரியே காணாமல் போகும் அளவுக்கு சிலர் இந்த அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கும் காரணை புதுச்சேரி ஊராட்சி மக்கள் பல முறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுப்பதோடு, ஏரியை ஆழப்படுத்தி விவசாய பயிர்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook