சென்னை :காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதை மின்வாரியம் தடுப்பதாக உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பத¤லளித்தார். சட்டசபையில் இன்று நடந்த விவாதம் வருமாறு: குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): கடந்த சில நாட்களாக காற்றாலைகளில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின் வாரிய அதிகாரிகள், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டாம் எங்களிடம் சேமிக்கும் வசதி இல்லை என்று கூறி மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): காற்றாலைகள் மூலம் 7 ஆயிரம் மெகாவாட்வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று காற்றாலைகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்த மின் உற்பத்தியையும் பெற்று பயன்படுத்த வேண்டும். அதற்கான சேமிக்கும் வசதி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு பதிலளித்து மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
உறுப்பினர்கள் கூறிய தகவல் தவறானது. உற்பத்தியை குறைத்துக் கொள்ளுமாறு காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் 6 ஆயிரத்து 696 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. நம்மிடம் காற்றாலைகளிடம் இருந்து வரும் மின்சாரத்தை உரிய முறையில் பயன்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளது. அதே போல¢ தனியார் சார்பில் துணை மின் நிலையங்கள் அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 400 கிலோ வாட் துணை மின் நிலையங்களை அமைக்க தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் அமைப்புகள் அமைக்கும் துணை மின் நிலையங்களுக்கான தொகையை 5 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களுக்கு அளிக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook