புதுச்சேரி :பணம், உடை கேட்டு தொந்தரவு செய்ததால் காதலியை அடித்துக் கொன்றதாக போலீசில் சரணடைந்த விழுப்புரம் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். புதுவை தட்டாஞ்சாவடி மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சிந்துஜா (21). பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்தார். விழுப்புரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராஜ்கமல் (22). இன்ஜினியரிங் பட்டதாரி. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த ஊழியர். இதற்காக மீனாட்சிபேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். ராஜ்கமலும், சிந்துஜாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில், செமஸ்டர் தேர்வுக்கு படிக்க வாணரப்பேட்டை தோழி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நேற்று காலை சிந்துஜா வெளியே சென்றார். இதற்கிடையில் சிந்துஜாவை, ராஜ்கமல் தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜ்கமல் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சிந்துஜா தலையில் ஓங்கி அடித்துள்ளார். அவர் கீழே விழுந்ததும் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் நேற்று பிற்பகல் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சிந்துஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
போலீசில் ராஜ்கமல் இன்று அளித்த வாக்குமூலம்: சிந்துஜாவும், நானும் காதலித்து வந்தோம். நேற்று செமஸ்டர் தேர்வுக்கு படிக்க தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சிந்துஜா வெளியே வந்தார். அவரை நான் தாவரவியல் பூங்காவுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் சிந்துஜா டிரஸ் எடுத்துக் கொடு அல்லது பணம் கொடு என்று கேட்டார். நான் இப்போது இல்லை என்று கூறியதும் அவர் என்னை அசிங்கமாக திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த மரக் கட்டையை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தேன். கீழே விழுந்ததம் முகத்தையும் சேதப்படுத்தினேன். அவர் இறந்ததும் எனக்கு பயம் ஏற்பட்டது. இதனால் போலீசில் சரணடைந்தேன். இவ்வாறு ராஜ்கமல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். காதலியை காதலன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook