சென்னை :குடியிருப்பு பகுதியில் அதிக ஆழத்தில் தண்ணீர் எடுக்க தடை விதித்த ஆர்டிஓ உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஒசூரை சேர்ந்த குமாரவேல், தனக்கு சொந்தமான இடத்தில் 600 மற்றும் 900 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து தினமும் 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்து, பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். சுமார் 5 ஆண்டுகள் இந்த போர்வெல்களில் 10 குதிரை திறன்கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து வந்துள்ளார். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாசில்தார், கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதிக ஆழத்தில் தண்ணீர் உறிஞ்சப்படு வதால் நிலத்தடி நீர் குறைந்து, எங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி வழியாக குடிநீர் லாரிகள் செல்வதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, குமாரவேல் நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கோரியிருந்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணகிரி ஆர்டிஓ, குமாரவேல் நிலத்தில் போர்வெல்கள் மூலம் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றும், தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குமாரவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: வணிக நோக்கத்துக்காக அதிக ஆழத்தில் போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு எடுக்கும் தண்ணீரை ஓசூர் நகராட்சிக்கு தருகிறேன் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. ஆர்டிஓ உத்தரவில் பொதுநலன் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதியே இதுபோன்று அதிக ஆழத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. பொதுமக்கள் இதுபோன்ற புகார்களை கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, குமாரவேல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook