இத்தாலி கப்பலை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் புது நிபந்தனை
புதுடெல்லி :கடந்த பிப்ரவரி மாதம் கொல்லம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய சரக்கு கப்பல் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இத்தாலிய கப்பலையும், துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலிய வீரர்கள் இரண்டு பேரையும் இந்திய அதிகாரிகள் சிறை பிடித்தனர். இத்தாலிய கப்பலை விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை கொச்சி ஐகோர்ட தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் கப்பல் நிறுவனமும், இத்தாலி அரசும் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இத்தாலி கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் அனைவரையும் எந்த நேரத்திலும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம் என இத்தாலிய அரசு உறுதி அளித்தால் கப்பலை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. மேலும் இறந்து போன மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளித்து சமரசம் செய்து கொண்டது செல்லாது எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.