சென்னை: தேர்வு எழுதுவோர் வசதிக்காக, தாலுகா தலைமையிடங்கள் அனைத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சேர்மன் நட்ராஜ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்துக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இணையவழி முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் மாநிலம் முழுவதும் 500 இலவச இணையவழி பதிவு சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 15 இணையவழி பதிவு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி பதிவு சேவை மையத்தை டிஎன்பிஎஸ்சி சேர்மன் நட்ராஜ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உதயசந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், நட்ராஜ் அளித்த பேட்டி: குரூப் 4 தேர்வில் 10,793 காலி பணியிட பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு அறிவிக்கப்பட்ட 2 நாளில் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள் ளனர். நிரந்தர பதிவு முறைக்கு இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகள் அதிகபட்சமாக 104 மையங்களில் மட்டுமே நடந்தது. இது தற்போது, 245 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா தலைமையிடங்களும் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள் ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த வட்டங்களிலேயே தேர்வு எழுதலாம். சென்னை தற்போது மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை என மூன்றாகப் பிரிக்கப்பட்டு 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களை தேர்வு எழுதுவோரே தேர்வு செய்து கொள்ளலாம். அப்படி அவர்களுக்கு அந்த தேர்வு மையம் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்படும். அண்மையில் நடத்தப்பட்ட குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook