ஆவடி : கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்த மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவர், கமிஷனர் ஆபீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் பட்டாபிராமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அருகே பட்டாபிராம் திருவள்ளுவர் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (39). இவர்களுக்கு சுனில்குமார் (18), சோனு (11) என்ற மகன்களும் சுசித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். லட்சுமி நடத்தையில் சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு நடக்குமாம். இந்நிலையில், நேற்றிரவும் அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் மாடிக்கு சென்றனர். அங்கும் நீண்டநேரம் வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. மாடியிலேயே இருவரும் தூங்கினர். அதிகாலையில் சீனிவாசன் எழுந்து வெளியே சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் பெற்றோர் கீழே வராததால் பிள்ளைகள் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்பாவை காணவில்லை என்றதும் அம்மாவை தேடினர். மாடியில் உள்ள அறையில் லட்சுமி இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த சுனில்குமார், பெரியம்மா பாலநாகம்மாவுக்கு தகவல் கொடுத்தார். பட்டாபிராம் போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது. பட்டாபிராம் உதவி கமிஷனர் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் வந்து லட்சுமி சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைமறைவான சீனிவாசனை தேடத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற சீனிவாசன், அங்கிருந்த போலீசாரிடம், ‘‘மனைவியை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன். போலீசில் சரணடைய வந்துள்ளேன்’’ என்றார். இதையடுத்து அவரை எழும்பூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: லட்சுமிக்கும் முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த மோசஸ் என்ற வாலிபருக்கும் தொடர்பு இருந்தது. லட்சுமியை சீனிவாசனும் உறவினர்களும் கண்டித்துள்ளனர். அவர் கேட்கவில்லை. சீனிவாசன் உறவினர்கள் சிலர், கடந்த மாதம் மோசஸ் வீட்டுக்கு சென்று அவரை அடித்து உதைத்து, லட்சுமியுடன் இனி தொடர்பு வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். கடந்த 8,ம் தேதி லட்சுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் 14,ம் தேதி பட்டாபிராம் போலீசில் சீனிவாசன் புகார் கொடுத்தார். போலீசார் மோசஸை பிடித்து விசாரித்தனர். சென்னை வேப்பேரியில் உள்ள காப்பகத்தில் லட்சுமி தங்கியிருந்தது தெரிந்தது. அவரை போலீசார் விசாரித்தனர். கணவனுடன் செல்ல விருப்பமில்லை என அவர் கூறிவிட்டார். அதனால், காப்பகத்திலேயே போலீசார் விட்டுவிட்டனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக காப்பக வார்டனிடம் லட்சுமி கூறியுள்ளார். அதுபற்றி சீனிவாசனுக்கு தகவல் தரப்பட்டது. அவர், மகன் சுனில்குமாருடன் நேற்று காப்பகத்துக்கு சென்று லட்சுமியை அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. ‘உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. உன்னை விவாகரத்து செய்யப் போகிறேன்’ என லட்சுமி கூறியுள்ளார். இரவு முழுக்க வாக்குவாதம் நடந்துள்ளது. குழந்தைகள் தூங்கிய பிறகு இருவரும் மாடிக்கு சென்றனர். அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த சீனிவாசன், லட்சுமி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். இவ்வாறு முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook