புழல் : வாகன தணிக்கையில் அதிரடியாக ஃபைன் போடுவதால் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பாடியநல்லூர், மொண்டியம்மன் நகர், பம்மதுகுளம், திருவள்ளூர் கூட்டு சாலை, செங்குன்றம், புழல், மாதவரம், மணலி, மாத்தூர் உள்ளிட்ட சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு சாலையோரத்தில் மின் விளக்குகள் இல்லை. மேலும், பெரும்பாலான இடங்களில் சிக்னல் இருந்தும் இயங்கவில்லை. இரவில் பலர் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுகின்றனர். சிலர், செல்போனில் பேசியபடி செல்கின்றனர். ஒரு வழிப்பாதை என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 10ம் தேதி வரை மாதவரம் காவல் போக்குவரத்து உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி வாகன தணிக்கையில் 520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பலர் போதையில் வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் நபர் ஒருவருக்கு ரூ.2500 வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர் உரிமமும் கைப்பற்றப்பட்டது. மீண்டும் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் எச்சரித்தனர்.
இதற்கு முன்பு வாகன ஓட்டிகள் மது அருந்தினால் அதை கண்டுபிடிக்க அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தற்போது, போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் காரிலேயே அனைத்து வசதிகளும் உள்ளது. மது அருந்தினால், அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக் கிழமை இரவில்தான் இப்பகுதியில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகமாக உள்ளனர். தற்போது இந்த அதிரடி வாகன தணிக்கையால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குறைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் 100க்கு 60 சதவீதம் பேர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பைக்கில் மட்டுமல்லாமல் ஷேர் ஆட்டோ, கனரக வாகனங்களின் டிரைவர்களிடமும் முதன்முறையாக சோதனை நடந்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook