சீனாவில் இன கலவரம் 12 பேர் வெட்டி கொலை
பீஜிங் : சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது. 2009ல் ஏற்பட்ட மோதலில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலையிலும் கலவரம் வெடித்தது. 32 பேர் பலியாயினர். இந்நிலையில், சின்ஜியாங் பகுதியில் உள்ள யெச்செங் கவுன்டியில் இரு பிரிவினர் இடையே நேற்று மோதல் வெடித்தது. இதில் 12 பேர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டனர். அரசு வாகனங்கள், அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடந்தன. கலவரத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.