மது பழக்கத்தை ஊக்குவிக்கும் சமூக இணையதளங்கள் !
வெலிங்டன் : பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் மனிதர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் குறித்து நியூசிலாந்தின் மாசே பல்கலை பேராசிரியர் அன்டோனியா லயன்ஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த தகவல் பற்றி லயன்ஸ் கூறியதாவது: சமூக இணையதளங்கள் மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகின்றன. ‘மது பழக்கம் மிகமிக சாதாரணமானதுதான். பெரிய பெரிய விஐபிக்கள்கூட குடிக்கிறார்கள்’ என்ற மனநிலையை இளைஞர்கள் மத்தியில் இந்த இணையதளங்கள் ஏற்படுத்துகின்றன. மது அருந்தும் போட்டோக்களை பிரபலப்படுத்துகின்றன.
இளைஞர்கள் அதுபோன்ற போட்டோக்களை பகிர்ந்துகொள்ளவும் வலியுறுத்துகின்றன. இந்த இணையதளங்கள் மூலமான சமூக இணைப்பு, மது பழக்கம் ஆகியவை புது அந்தஸ்து, அனுபவம், மகிழ்ச்சியை தருவதாக பரப்பப்படுகிறது. இதனால், தவறான பாதை நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். சமூக இணையதளங்களை பார்க்க ஆரம்பித்த பிறகுதான், மது பழக்கத்தை ஆரம்பித்ததாக 18 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் தெரிவிக்கின்றனர். ஒருவர் விரும்புகிற இசையையும் அவருக்கு ஏற்ற மது பானத்தையும் ‘டிரிங்க்கிஃபை’ என்ற இணையதளம் ஒப்பிட்டு, மது வகையை பரிந்துரைக்கிறது. மது பாட்டில்களை திறக்கும் ‘ஓபனர்’ வசதியும் ஆப்பிள் ஐபோனில் இருக்கிறது. ஒவ்வொரு முறை பாட்டிலை திறக்கும்போது பாட்டு சத்தம் கேட்குமாம். எத்தனை முறை பாட்டில் திறக்கப்பட்டுள்ளது என்பதை ‘ஓபனர் அப்ளிகேஷன்’ மூலம் தெரிந்துகொள்ளவும் முடிகிறது. இதுவும் ஒரு வகையில் மது ஊக்குவிப்பு போலவே தெரிகிறது.