சென்னை: தொடர் மழையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். மழைக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வெள்ள சேதம் மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று காலை கோட்டையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று வரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், இடி மற்றும் மின்சாரம் தாக்கியும், மண் சரிவில் சிக்கியும், ஆற்று வெள்ளத்தில் மூழ்கியும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். மழை காரணமாக பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு, 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பட்டது. பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்படும் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
மழையால் 179 குடிசைகள் முழுமையாகவும் 705 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த குடிசைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் பகுதி சேதம் அடைந்த வீடுகளுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும். மழை காரணமாக 162 கால்நடைகள் பலியாகியுள்ளன. மாடுகளுக்கு ரூ.20 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ.2 ஆயிரம், கோழிக்கு ரூ.100 வழங்கப்படும். தூர்வாராத கால்வாய்களை உடனடியாக தூர்வார உத்தரவிட்டுள்ளேன். மழையால் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக செப்பனிடவும், பருவமழை முடிந்த பிறகு முழுவதுமாக சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook