சென்னை: அரபிக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அண்ணா சாலை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் வாகனங்கள் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் வர பல மணி நேரமானது. இதனால் இரவு 9 மணிக்கு புறப்படும் பஸ், நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் இயக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்ல கோயம்பேட்டில் குழந்தைகளுடன் காத்திருந்தவர்கள் மழைநீரில் பல மணி நேரம் தவித்தனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: குமரிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் வடமேற்கு திசையில் நகர்ந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரபிக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது. அது வங்கக் கடல் பகுதியில் உள்ள ஈரக்காற்றை தமிழகத்தின் வழியாக ஈர்க்கிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும். தெற்கு கர்நாடக பகுதி மற்றும் வடதமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் சென்னையில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். சில இடங்களில் மேகமூட்டமாக இருக்கும். இவ்வாறு ரமணன் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook