ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தல் விரோதத்தில் வாலிபரை தேமுதிகவினர் கத்தியால் குத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு கும்பல், தாக்கியவர்களின் வீடுகளை சூறையாடியது. இந்த சம்பவங்களால் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் கச்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி (21). இவர் நேற்றிரவு 8 மணியளவில் விஆர்பி சத்திரத்தை சேர்ந்த நண்பர் சதீஷ் உடன் பைக்கில் விஆர்பி சத்திரம் சென்றார். அப்போது கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த கும்பல் பைக்கை வழிமறித்து இருவரையும் தாக்க ஆரம்பித்தது. இதில் கத்தியால் சரமாரியாக குத்தியதில் மிதுன் சக்கரவர்த்திக்கு மார்பு, மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டது. சுதாரித்துக்கொண்ட சதீஷ், உடனே கும்பலிடமிருந்து நண்பரை மீட்டு பைக்கில் தப்பினார். காயம் அடைந்த மிதுன் சக்கரவர்த்தியை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின் கிராமத்திற்கு சென்று நடந்ததை சதீஷ் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கச்சிபட்டு பகுதியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களுடன் விஆர்பி சத்திரம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு, மிதுனை தாக்கியதாக கூறப்படும் ராஜேஷ், சத்யா, இளவரசன் உள்பட 6 பேரின் வீடுகளை சூறையாடினர். வீட்டில் இருந்த டிவி, மேஜை, நாற்காலி, பாத்திரங்ளை அடித்து நொறுக்கினர். வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த ஒரு கார், பைக்கும் உடைக்கப்பட்டது. கும்பலை தடுக்க முயன்ற சத்யாவின் தந்தை கணேஷ் (55) காயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கஜேந்திர குமார், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சப்இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 20க்கும் அதிகமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் தேர்தல் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மிதுன் சக்கரவர்த்தியை கத்தியால் குத்தியதாக கூறி ராஜேஷ், சத்யா, இளவரசன், முனுசாமி ஆகியோர் மீதும் வீடுகளை சூறையாடியதாக சதீஷ்குமார், வீரபத்திரன், ஏழுமலை, சட்டநாதன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
விஆர்பி சத்திரம் 8வது வார்டில் தேமுதிகவை சேர்ந்த சத்யா, புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மதன்ராஜ் போட்டியிட்டனர். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. தேர்தலில் மதன்ராஜ் வெற்றி பெற்றார். மதன்ராஜின் அண்ணன் மகன் மிதுன் சக்ரவர்த்தி. தேர்தல் விரோதம் காரணமாகவே மிதுனைதேமுதிகவினர் கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook