கடனை கேட்டு அவமானப்படுத்தியதால் : இளம்பெண் தீக்குளித்து பலி
ஆவடி : கடனை திருப்பி கேட்டு திட்டியதால், அவமானம் தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து பலியானார். இது தொடர்பாக கடன் கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி கோவில்பதாகை சாமிநகர் 2வது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ரம்யா (25). இவர், கொல்லுமேடு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் காசி என்பவரின் மனைவி வசந்தாவிடம் (41) ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். பணத்தை திரும்ப கொடுக்காமல் ரம்யா காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ரம்யா வீட்டுக்கு சென்ற வசந்தா, வாசலில் நின்று பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். தெருவில் செல்லும் அனைவருக்கும் கேட்கும்படி திட்டியிருக்கிறார். பின்னர் ஒரிரு நாளில் பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்றும் எச்சரித்து சென்றார்.
இதனால் அவமானம் அடைந்த ரம்யா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர். ரம்யா உடலில் கோணியை போர்த்தி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் உடல் கருகிய அவர், பரிதாபமாக இறந்தார்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், இன்று காலை வசந்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.