புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் என்று தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை படித்தார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து ஆலோசிக்கவும், திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் கூடியுள்ளது.
ஆனால், இந்த கூட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல் சம்பிரதாயமாக மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் மக்கள் பிரச்னைகளை, மத்தியில் உள்ள இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்களின் நியாயமான கோரிக்கைகள், தேவைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றித் தருவதில்லை. சிறப்பு உதவி, நிதி ஒதுக்கீடு குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், மத்தியில் ஆளும் கூட்டணியில் இருப்பதாலேயே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்கள் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசு எடுக்கும் பல நடவடிக்கைகள் பாசிச மனப்பான்மையுடனும் ஜனநாயக விரோதமாகவும் உள்ளன. குறிப்பாக மதக்கலவரத்தை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல். எல்லா அதிகாரமும் தன்னிடமே குவிந்து கிடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணத்தை இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இதனால் எல்லா விஷயத்துக்கும் மத்திய அரசை கையேந்தும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படும். இதேபோல் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை (வாட்) பறிக்கும் முயற்சியாக உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, ஜிஎஸ்டி வரியை கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.
தொழில் கல்வி சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில், மாநிலங்களின் நிலைமை, கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாநில கல்வித் துறையிலும் மத்திய அரசு அடிக்கடி தலையிடுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி நடத்தும் தாக்குதலை, இந்தியா மீது நடத்தும் தாக்குதலாக இதுவரை மத்திய அரசு நினைக்கவில்லை. மீனவர் மீதான தாக்குதல் ஏதோ தமிழகத்துக்கான சிறிய பிரச்னையாக மத்திய அரசு நினைக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோன்ற சூழ்நிலைகளில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் கூடுவதால் எந்த பயனும் ஏற்படாதோ என்ற அச்சம் எனக்கு எழுந்துள்ளது. கவுன்சில் திட்டமிட்டுள்ள விரைந்த, கூடுதல் வளர்ச்சி என்ற இலக்கு சரியான பாதையை நோக்கி செல்லவில்லை. 12வது ஐந்தாண்டு திட்டம் பற்றி யோசிக்கும் இந்த நேரத்தில், 11வது ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தும் போது ஏற்பட்ட தோல்விகளை பற்றி ஆராய வேண்டும். அதன் அடிப்படையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை குறைகள் இல்லாமல் அமல்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு மாநில முதல்வர்களை கலந்தாலோசிக்கவும், அவர்களை சம பங்குதாரராக நினைத்து திட்டங்களை வகுக்கவும் அமைக்கப்பட்டதுதான் தேசிய வளர்ச்சி கவுன்சில். ஆனால், மாநிலங்களை பங்குதாரர்களாக மத்திய அரசு கருதுகிறதா என்று தெரியவில்லை. ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்க கூடுதல் கெரசின், கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றித் தரவில்லை என்றால், இதுபோன்ற கூட்டங்கள் வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதனால் மாநிலங்களும் மக்களும் கடும் அதிருப்திக்கு ஆளாவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை இல்லாத இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளதாக நம்புகிறேன். நாட்டின் ஏழை மக்கள் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், மாநிலங்களின் கோரிக்கைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று இந்தக் கூட்டத்தை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேளாண்மை, உற்பத்தி துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறாதது, ஏழை - பணக்காரன் வித்தியாசம் அதிகரித்துள்ளதால் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிரச்னைகள் குறித்தும் ஜெயலலிதா தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook