சிர்தே: முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, லிபியாவின் அடுத்த ஆட்சியாளர்கள் யார் என்பதில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கடாபி. கடந்த 69ம் ஆண்டு தனது 27வது வயதிலேயே ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர். இளம்வயதில் ஒரு நாட்டையே கைப்பற்றி அடக்குமுறையை கையாண்டவர். அதேபோல் உலகிலேயே அதிகஆண்டுகள் ஆட்சி செய்தவர் என்ற பெயரையும் எடுத்தார். அமெரிக்கா உள்பட சர்வதேச நாடுகளை பகைத்து கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டார். தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவித்தார். இதனால் உள்நாட்டில் இவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. வழக்கம் போல் ராணுவ தாக்குதல் மூலம் ஒடுக்கிவிடலாம் என்று கடாபி நினைத்தது நிறைவேறவில்லை. லிபியா முழுவதும் புரட்சி வெடிக்க, அதற்காகவே காத்திருந்த அமெரிக்க, ஐரோப்பிய படைகள் உதவிக்கரம் நீட்டின. இதன்மூலம் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட புரட்சி படையினருக்கு பலம் கிடைத்தது. படிப்படியாக ஒவ்வொரு நகராக கைப்பற்றினர். கடைசியில் தலைநகர் ட்ரிபோலி, கடாபியின் சொந்த ஊரான சிர்தேவும் மட்டும் மிஞ்சின. கடந்த ஒரு வாரமாக நடந்த உச்சகட்ட சண்டைக்கு பின், ட்ரிபோலியும் சிர்தேவும் புரட்சி படையினரிடம் விழுந்தன. பதுங்கு குழியில் மறைந்திருந்த கடாபியை தரதரவென வெளியில் இழுத்து வந்தனர்.
சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவருடைய தலை, வயிறு, கால்களில் சுட்டுத் தள்ளினர். இதன்மூலம் 42 ஆண்டு சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 69ம் ஆண்டு ஆட்சியை பிடித்த கடாபி, 69வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை லிபிய மக்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கடாபியின் உடல் மிஸ்ரடா பகுதியில் உள்ள மசூதியில் வைக்கப்பட்டுள்ளதாக புரட்சி படையினர் தெரிவித்தனர். எனினும், லிபியாவை அடுத்து ஆளப்போவது யார் என்பது கேள்விக் குறியாகி உள்ளது. இதுகுறித்து லிபிய தேசிய மாற்று அரசு கவுன்சில் தலைவர் மஜித் கூறியதாவது:
லிபியாவில் அடுத்து ஆட்சி பொறுப்பேற்பது யார் என்பதில் கவுன்சில் உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த புதிய ஆட்சியில் எல்லா கட்சியினரும் நாட்டின் எல்லா தரப்பு பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். கடாபியை கொல்வது மட்டுமே எங்கள் நோக்கம் இல்லை. அது சிறிய வேலைதான். இனிமேல்தான் பெரிய கடமையே உள்ளது. லிபிய மக்களுக்கு நீதி, சுதந்திரம், வளர்ச்சி வேண்டும். அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவ்வாறு மஜித் கூறினார்.
தற்காலி பிரதமர் மமூத் ஜிப்ரில் கூறுகையில், ÔÔபுதிய லிபியாவை உருவாக்கும் நேரம் வந்துள்ளது. Ôஒரே மக்கள்; ஒரே எதிர்காலம்Õ என்ற கோஷம் அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்ÕÕ என்றார். இதற்கிடையில், லிபியாவில் ஜனநாயக அரசு அமைக்க உதவுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல நாட்டு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்த கடாபி
கடந்த 2009ல் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் முதன்முதலாக கடாபி பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னையை கிளப்பி பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம். பாகிஸ்தானுக்கும் வேண்டாம். அதை தனி நாடாக அறிவித்துவிட வேண்டும். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்டு பல பெரிய நாடுகள் போட்டி போடுகின்றன. இப்போதுள்ள நாடுகளே அரசியல் செய்கின்றன. அவை உலகை பாதுகாக்க செயல்படுவதில்லை. இந்நிலையில் மேலும் பல நாடுகளை சேர்த்தால், அது உலகத்துக்கே ஆபத்தாக முடியும்.
வறுமை அதிகரிக்கும், டென்ஷன் அதிகரிக்கும், பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடும். கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரக்கூடாது. அப்படி கொடுத்தால், பாகிஸ்தானும் நிரந்தர இடம் கேட்கும். இதனால் பிரச்னை பெரிதாகும். ஐ.நா.வில் இப்போது உள்ளது பாதுகாப்பு கவுன்சில் அல்ல. அது ஒரு தீவிரவாத கவுன்சில் என்று பேசினார். இவரது பேச்சை கேட்டு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தவிர சோமாலியர்களை கொள்ளையர்கள் என்கின்றனர். அவர்களுடைய வளமையை கொள்ளை அடித்தது நாம்தான். இத்தாலி, ஜெர்மனி, இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஜப்பான்... இப்படி என்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். அதை பற்றி கவலை இல்லை. சோமாலியாவை கொள்ளை அடித்தது நாம்தான். நாம்தான் கொள்ளையர்கள் என்று ஆவேசமாக பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook