சித்தூர்: தெலங்கானாவில் இன்று பந்த் நடக்கிறது. இதனால் பஸ், ஆட்டோ ஓடவில்லை. பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் தனி தெலங்கானா கோரி கடந்த மாதம் 13ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 2 நாட்கள் நடந்த போராட்டத்தில் நடிகை விஜயசாந்தி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இன்று நடைபெற இருந்த 3வது நாள் ரயில்மறியல் போராட்டம் கைவிடப்பட்டதால் நேற்றிரவு முதல் ரயில்கள் இயக்கப்பட்டன.
போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று ஒரு நாள் பந்த்துக்கு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஐதராபாத் உள்பட 10 தெலங்கானா மாவட்டங்களில் பந்த் நடைபெறுகிறது. இன்று காலை முதல் பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ஏடிஎம்களும் இயங்கவில்லை. எல்லா பஸ்களும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பந்த்திற்கு, தெலங்கானா ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதால் நள்ளிரவு முதல் ஆட்டோக்கள் ஓடவில்லை.
அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்சட்டசபை, கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு மற்றும் அமைச்சர்கள் வீடுகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பந்த்தால்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு!
பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக தெலங்கானா பகுதியில் உள்ள ஆசிரியர் சங்கத்துடன் அரசு தொடர்ந்து பேச்சு நடத்தியது. இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டது. நாளை முதல் பள்ளி, கல்லூரிக்கு செல்வதாகவும், ஆனால் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமலும், சம்பளம் பெற்றுக்கொள்ளாமலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருதி பணி செய்வதாகவும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதையடுதது நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook