பஞ்சலோக நகை தயாரிப்பில் பிரமாத லாபம்!
‘‘தங்கம் விலை ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஏழை, நடுத்தர பெண்களின் தங்க நகை கனவை, பஞ்சலோக நகைகள்தான் நிறைவேற்றுகின்றன. தோல் அலர்ஜி, நகை கறுத்துவிடுமோ போன்ற கவலை இல்லை. பஞ்சலோக நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டால் நல்ல வருவாய் ஈட்டலாம்’’ என்கிறார் ஈரோடு ஸ்ரீகோல்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சீனிவாசன். அவர் கூறியதாவது: சேலத்தில் ஒரு நகைக் கடையில் வேலைபார்த்தேன்.
திருமணத்துக்கு பிறகு சொந்தமாக தங்க நகைக்கடை துவங்க நினைத்தபோது அதிக முதலீடு தேவைப்பட்டது. இதனால் பஞ்சலோக நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட முடிவெடுத்தேன். தங்க நகைகளை வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாங்க முடி கிறது. பஞ்ச லோக நகையை ஏழைகளும் வாங்க முடி யும். புதிய டிசைன்களில் தரத்துடன் தயாரித்து சாதிக்கலாம் என்று எண்ணி, தொழிலை தைரியமாக துவக்கினேன். இன்று, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா விலும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளேன்.
குறைந்த விலையில் நிறைய டிசைன்களுடன் தங்க நகைகளை தயாரிக்கும் அதே தொழில்நுட்பம், பஞ்சலோக நகை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தங்கத்துடன், செம்பு, வெள்ளி, பித்தளை, துத்தநாகம், வெண்கலம் ஆகிய உலோகங்களையும் சேர்த்து தயாரிப்பதால், ‘பஞ்சலோக நகைகள்’ என்று அழைக்கிறோம். குறைந்த விலைக்கு இவை கிடைப்பதால், ஒரு கிராம் நகை (நகையின் எடை கூடுத லாக, குறைவாக இருந்தாலும்) என்றே அழைக்கப்படுகின்றன. இல்லத்தரசிகள், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் இந்த நகைகளை தயார் செய்தும், வாங்கியும் விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
மூலப் பொருட்கள்
செம்பு, பித்தளை, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் 70%, வெள்ளி 10%, தங்கப்பவுடர் 5%, வெண்கலம் 15% கலந்து பஞ்சலோக நகைகள் தயார் செய்யப்படுகிறது. மும்பையில் இருந்து தங்கமும், சேலத்தில் இருந்து வெள்ளியும் கொள்முதல் செய்யலாம். சென்னை, கோவை போன்ற நகரங்களிலுள்ள நகை மார்க்கெட்டில் இருந்து துத்தநாகம், பித்தளை, கும்பகோணத்தில் இருந்து பித்தளை வாங்கலாம். பஞ்சலோக நகைக்கு பயன்படுத்தப்படும் செயற்கை வைரங்களான அமெரிக்கன் டைமண்ட் திருச்சியிலும், ரூபி, எமரால்டு கற்கள் ஐதராபாத், கொல்கத்தாவிலும் கிடைக்கும்.
தயாரிப்பு முறை
தங்கம் தவிர இதர மூலப்பொருட்களை 1800 டிகிரி வெப்பத்தில் உருக்கி எந்த பொருளை தயார் செய்கிறோமோ அதற்குரிய அச்சில் ஊற்றி தகடாக இழுக்க வேண்டும். தகடாக இழுத்ததை தேவையான அளவு துண்டித்து, துத்தநாகம் கொண்டு பற்றவைத்து இணைக்க வேண்டும். பின்னர் காப்பர் பாலிஷ் போட வேண்டும். பாலிஷ் போடும்போது நகைகளில் உள்ள பிசிறுகள் அகற்றப்படும். பிசிறுகளை அகற்றுவதால் தோல் அலர்ஜி முற்றிலும் தடுக்கப்படுகிறது.
பின்னர் அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 3 கிராம், 4 கிராம் என தேவைக்கேற்றபடி நகை தடிமனுக்கு ஏற்ற அளவில் தங்கம் எடுத்து 4500 டிகிரி வெப்பத்தில் உருக்கி திரவமாக மாற்றி, உருவாக்கிய நகைகள் மீது தங்க திரவத்தை லேமினேட் செய்தால் பஞ்சலோக நகை தயாராகிவிடும்.
எந்த மாதிரியான நகைகள் தயாரிக்க வேண்டும் என்பதை கம்ப்யூட்டரில் டிசைன் செய்து உலோக ஷீட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் கட்டர் மூலம் கட்டிங் செய்து டிசைனை உருவாக்க வேண்டும். உருவாக்கப்பட்ட டிசைனை கொண்டே தங்க மெருகு ஏற்ற வேண்டும். தயார் செய்யப்படும் நகைகள் ஒரு ஆண்டு வரை கறுத்து போவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாலிஷ் செய்து கொண்டால் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
கம்மல், மோதிரம், சங்கிலி, நெக்லஸ், ஆரம், கால் கொலுசு, கல் வைத்த மோதிரம் என தங்க நகைகளில் என்னென்ன ரகங்கள் உண்டோ இவை அனைத்தும் ஒரிஜினல் தங்க நகைகளை போன்றே தயார் செய்ய முடியும். ஒரு கிராம் தங்கம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆபரணம், 20 கிராம் தங்கம் கொண்டு தயாரித்தது போல தோற்றமளிக்கும்.
முதலீடு!
நிறுவனத்தை துவங்க ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, கட்டிங் பிளேடு உள்பட நகை தயாரிப்பு உபகரணங்கள் வாங்க ரூ.5 ஆயிரம், தங்க பாலிஷ் போடும் இயந்திரம் வாங்க ரூ.30 ஆயிரம், காஸ்டிங் மாடல் டை வாங்க ரூ.1500 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும்.
உற்பத்தி செலவு
மூலப்பொருட்களான தங்கம், செம்பு, வெள்ளி, பித்தளை, துத்தநாகம் வாங்க ரூ.50 ஆயிரம், தங்க பாலிஷ் செய்ய ரூ.30 ஆயிரம், 10 ஊழியர்கள் 15 நாட்களுக்கு பணி செய்ய கூலி ரூ.15 ஆயிரம்.
மாதம் ரூ.17 ஆயிரம்
ரூ.50 ஆயிரத்துக்கு மூலப்பொருட்கள் வாங்கும்போது 60 சங்கிலிகள் தயாரிக்க முடியும். ஒரு சங்கிலிக்கு மார்க்கெட்டில் ரூ.1415 வரை விலை கிடைக்கிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள சங்கிலிகளை தயாரிக்க முடியும். இவற்றிற்கு 10 முதல் 15 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கலாம். இவற்றை தயாரித்து விற்றால், 15 நாட்களுக்கு ரூ.8500 வரை சம்பாதிக்கலாம். மாதம் 120 சங்கிலிகளை தயாரித்து விற்பதன் மூலம் மாதம் ரூ.17 ஆயிரம் சம்பாதிக்கலாம். முதலீட்டை அதிகரித்தால், அதற்கு தகுந்தவாறு வருமானம் கூடும்.
சந்தை வாய்ப்பு
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பாக பஞ்சலோக நகைகள் வழங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பியூட்டி பார்லர்களில் மணப்பெண் அலங்கார நகைகளாகவும், பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங்கான கலர் கல் பொருத்தப்பட்ட பஞ்சலோக தங்க நகைகளும் தற்போது மார்க்கெட்டில் புழக்கத்தில் உள்ளன. கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பெண்களாலும் இந்த நகைகள் பெரிதும் விரும்பப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் கூட தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து விட்டு, தங்க நகை போலவே காட்சியளிக்கும் பஞ்ச லோக நகைகளை வாங்கி அணிகிறார்கள். மணப்பெண் அலங்காரம், பள்ளி, கல்லூரிகளில் நடன நிகழ்ச்சிகளுக்கு பஞ்சலோக நகைகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும் கணிசமாக சம்பாதிக்க முடியும். மகளிர் சுய உதவிக்குழுவினர், மாற்று திறனாளிகள் போன்றவர்கள் இத்தொழிலை துவக்கினால் நல்ல லாபம் பெறலாம்.