மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க காப்புகளை சென்னை ஏர்போர்ட்டில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் உத்தரவின்பேரில் அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அதிகாலை 5.30 மணிக்கு இலங்கையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களில் 8 பேர், ஒரே குழுவினராக சுற்றுலா விசாவில் சென்று வந்தவர்கள். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணை நடத்தியதில் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
3 மணி நேரம் விசாரணை நடந்தது. அவர்கள் எடுத்துவந்த பைகளில் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கறுப்பு பேப்பரில் சுற்றப்பட்ட சிறிய பார்சல்கள் இருந்தன. அவற்றில் 2 கிலோ தங்க காப்புகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். காப்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook