ஹமித் கர்சாயை கொல்ல சதி : பேராசிரியர், 4 மாணவர் கைது!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தானின் உளவுத் துறை ஐஎஸ்ஐ நேரடியாக உதவி வருகிறது என்று அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு கூறி வருகிறது. இதற்கிடையில் ஆப்கனில் அமைதிக்காக பாடுபட்டு வந்த முன்னாள் அதிபர் ரபானியை தலிபான் தீவிரவாதிகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க சர்வதேச அளவில் ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் உதவி கேட்டு வருகிறார்.
இந்நிலையில் அதிபர் கர்சாயை கொலை செய்ய திட்டமிட்ட மருத்துவ பேராசிரியர், மாணவர்கள் 4 பேரை கைது செய்துள்ளதாக ஆப்கன் உளவுத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ÔÔஹக்கானி தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்கள் மருத்துவ பேராசிரியர், மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் மூலம் கர்சாயின் பாதுகாவலர்களை ஒருவரை தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர்.
அவர் மூலம் கர்சாயை கொல்ல சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாவலரும் மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.5 லட்சம் அமெரிக்க டாலரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறதுÕÕ என்று தெரிவித்தனர். ஆப்கன் அதிபராக 2002ல் பதவியேற்ற பின்னர், ஹமித் கர்சாயை கொல்ல 3 முறை முயற்சி நடந்தது. கடந்த 2008ல் ராணுவ அணிவகுப்பில் கர்சாய் பங்கேற்ற போது ராக்கெட் வீசி கொல்ல முயற்சி நடந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.