சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் குளுகுளு சூழலில் அமைந்துள்ளது முனியப்பன் கோயில். ஆண்டு முழுவதும் அசைவ படையலிட்டு முனியப்பனை பக்தர்கள் பயபக்தியோடு கும்பிடுகிறார்கள். முனியப்பன் கோயில் உருவான வரலாறு வியப்படைய வைக்கிறது. அணை கட்டுவதற்கு முன்பே, அங்குள்ள ஊஞ்சமரத்தடியில் மண் கூட்டுக்குள் சிறிய முனியப்பன் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். 1925ம் ஆண்டு மேட்டூர் அணைக்கட்டு கட்டும் பணி துவங்கியது. பிரிட்டிஷ் இன்ஜினியர் எல்லீஸ், மேட்டூர் அணையை வடிவமைத்து கட்டியவர். அணையின் மேல்மட்ட மதகில் இருந்து டெல்டா பாசன கால்வாயில் தண்ணீரை சேர்ப்பதற்காக மற்றொரு கால்வாயை வெட்டும் பணி நடந்தபோது, முனியப்பன் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. வேலையாட்களிடம் சிலையை அப்புறப்படுத்தும் படி கூறிவிட்டு சென்ற பிரிட்டிஷ் இன்ஜினியரின் கனவில் ஆக்ரோஷமாய் தோன்றிய முனியப்பன், சிலையை அகற்ற கூடாது என உத்தரவிட்டாராம். இதனால் பதைபதைத்துபோன இன்ஜினியர், கால்வாயை வேறு இடத்தில் வெட்ட சொல்லியதாக கிராமமக்கள் கூறுகின்றனர். இறைவனே காட்சி கொடுத்ததாக கருதிய இன்ஜினியர், சிறிய சிலையாக இருந்த முனியப்பனுக்கு பிரமாண்ட சிலையை சொந்த செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார். அந்த சிலை தான் தற்போது மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. தமிழக கிராம தெய்வத்துக்கு ஆங்கிலேயர் ஒருவர் சிலை எடுத்து கொடுத்தது எங்கும் இல்லாத அதிசயம் என்றும், அணைக்கு காவலாக இருப்பதே முனியப்பன்தான் என்றும் கூறுகிறார்கள் கிராமத்தினர். இதனாலே இவருக்கு ‘இடிதாங்கி முனியப்பன்’ என்ற பெயரும் உண்டாம். இதற்கு சாட்சியாக கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் சொல்லப்படுகிறது. 1947ம் ஆண்டில் ஒருநாள் மாலை மேட்டூர் அணையை இடி தாக்கியது. ஆனால் அணையில் சிறு விரிசல்கூட ஏற்படவில்லை. அதேபோல் கடந்த 1999ம் ஆண்டு அக்டோபரில் ஒருநாள் இரவில் இடி விழுந்தது. அப்போதும் அணைக்கு சிறு சேதம் கூட இல்லை. எல்லாம் முனியப்பனின் அருள் என்று பயபக்தியோடு சொல்கிறார்கள் ஊர்வாசிகள். அதுபோல சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், தலையில் எலுமிச்சை பழத்தை தேய்த்து காவிரியில் தலை முழுகி இங்குள்ள முனியப்பனை வணங்கினால் பூரண குணமடைவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook