மதுரை, -தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்தது. கடந்த அக்.19ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘பண்டிகை காலத்தில் கடந்தாண்டு வசூலித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கக் கூடாது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை கமிஷனர் சத்தியபிரதா சாகு ஆஜரானார். நீதிபதிகள், ‘அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தின் அடிப்படையில் 10 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசுவாமி ஆஜராகி, ‘அதிகாரப்பூர்வமாக எந்த கூட்டமும் நடக்கவில்லை. ஏற்கனவே கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரின் பேரில் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் இயக்குவோரால் தனி நபருக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது. ஏஜென்டுகள்தான் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கிறார்கள்’ என்றார்.‘ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களுக்கு எப்படி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த உத்தரவு:
மோட்டார் வாகன விதி 2(67)ன்படி அரசுதான் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலான பஸ்களுக்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது? ஏஜென்டுகள், ஆபரேட்டர்களுக்கு தனிநபர் கட்டணம் வசூலிக்கும் உரிமை கிடையாது. ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் போக்குவரத்து துறை செயலர், ஆணையர், சாலை போக்குவரத்து துறை இயக்குநர், புள்ளியல் துறை இயக்குநர், நிதித்துறை இணைச்செயலர் உள்ளிட்டோர் இருப்பர். இந்த குழுவினர் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு 3 மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
‘4 டயர், சில இரும்பு ராடு... இதுதானா சூப்பர் டீலக்ஸ்?’
விசாரணையின்போது அரசு போக்குவரத்து கழகத்தின் நிலை குறித்து வக்கீல்கள் குறிப்பிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘4 டயர், ஒரு டிரைவர், ஒரு கண்டக்டர், சில இரும்பு ராடுகளைக் கொண்டது தான் சூப்பர் டீலக்ஸ் பஸ். போக்குவரத்துக்கழகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடுகளை பெற போராடி வருகின்றனர்’ என தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.