அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், முருகவேள், நான்முகன், வேதம், சுக்கிரன், ராமர் வழிபட்டு பேறு பெற்ற கோயில், மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாகிய கபாலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் சுவாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம். அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில், சென்னை மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். கற்பகம் என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள். இவளைத் தரிசித்துவிட்டே சுவாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம்.
சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடைய முடியும் என்கின்றன. அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் கோயில். இங்கு வந்து அம்பாளை தரிசித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.இத்தகைய சிறப்புமிக்க இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கோலவிழியம்மனுக்கு கிராமதேவதை பூஜையுடன் திருவிழா தொடங்கியது. 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது.
முதல் நாள் இரவு தல விருட்சமான புன்னைமரத்தடியில் அம்பிகை மயில் வடிவில் ஈசனைப் பூஜிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான 16ம் தேதி நடைபெற்ற அதிகார நந்தி சேவையைக் காண மக்கள் பெருந்திரளாக குவிந்தனர். ஐந்தாம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் ஏழாம்நாளில் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. சிறிய தேரில் விநாயகர் உலா வர, பெரிய தேரில் கபாலீஸ்வரர் சுவாமி வலம் வந்தார். கற்பகாம்பாள், சிங்கார வேலர், சண்டிகேஸ்வரர் தேர்கள் பின்னால் தொடர்ந்து வந்தது. அன்று மாலை திருத்தேரிலிருந்து இறைவன் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.
ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. தேர்திருவிழாவை காண சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். மாடவீதிகளில், பல இடங்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கி உபசரிப்பர்.இந்த விழாவில் சிறப்பம்சம் என்னவென்றால் விநாயகர் முன்செல்ல, கபாலீஸ்வரர் பின்னால் வர, கற்பகாம்பாள், சிங்கார வேலர் தொடர்ந்து வர விழா நடைபெறுகிறது. அப்போது, அடியவர்கள் அவரை பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர்.
இந்த சப்பரங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனிதனியாக பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர். இந்த விழா, பங்குனி பெருவிழாவில் சிறப்பாகவிளங்குகிறது. ஸ்ரீகபாலீஸ்வரர்-கற்பகாம்பிகை மற்றும் பரிவார தேவதைகளோடு சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு மாட வீதிகளிலும் உலா வருவதைத் தரிசிக்க கட்டுக் கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை நடக்கும் இந்த விழாவைக் காண கண்கோடி வேண்டும்.
இதனை தொடர்ந்து பத்தாம் நாளான பங்குனி உத்திர தினத்தன்று கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருமண விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் விருந்துண்டு மொய் எழுதிச்செல்வது சிறப்பு. திருக்கல்யாணம் முடிந்த தம்பதியர் உமா மகேஸ்வரராக அருள்பாலிக்கின்றனர். பந்தம் பறி விழாவை தொடர்ந்து பங்குனி பெருவிழாவின் இறுதிநாளில் நிறைவு திருமுழுக்கு நடக்கிறது. அன்றிரவு விடையாற்றி விழா தொடங்குகிறது.