வெள்ளையாய் விகார முகம். அதை பாதியாய் மறைக்கும் அடர்த்தியான கூந்தல். தொங்கும் 2 கைகள் என மங்கலாய் தெரியும் அந்த செல்போன் உருவத்தை பார்த்து ஒரு கிராமமே குலை நடுங்கிக் கொண்டிருக்கிறது. செல்போன் படத்தை பார்த்து ஏன் அஞ்ச வேண்டும்? அந்த திகிலூட்டும் சம்பவம் விரிகிறது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கட்டனாச்சம்பட்டி கிராமம். திருமணம் ஆகாமல் இறக்கும் கன்னிப் பெண்கள் தாம்பத்திய ஆசை தீராததால், இறந்த பிறகும் கன்னியாக ஆவி வடிவில் அலைவார்கள் என்ற நம்பிக்கை இந்த கிராமத்தில் அதிகமாகவே இருக்கிறது. கன்னியாக இறந்த பெண் ஒருவள் பேயாக உலவுவதாகவும், அந்த ஆவியின் சேட்டை ஆங்காங்கே நடப்பதாகவும் கிராமத்தினர் நம்பி வந்தார்கள். மக்கள் மத்தியில் சிறு பொறியாய் இருந்த அச்சத்தீ பற்றி எரிந்ததற்கு காரணம் ஒரு செல்போன் படம்.
பேய் உலவுவதாக நம்பப்படும் சுடுகாட்டு பகுதியில் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது. கன்னிப் பேயின் ஆவேசம் பற்றி பெரிசுகள் எச்சரிப்பதால் இளைஞர்களும் அவ்வளவாக அங்கு போகமாட்டார்கள். அதிலும் அங்கிருக்கும் புளியமரத்தில்தான் பேய் இருப்பதாக கூறப்படுவதால் அதன் அருகில் யாரும் போவதுகூட இல்லை.
இந்த சுடுகாட்டின் அருகில் மினி டிரான்ஸ்பார்மர். இது அடிக்கடி மக்கர் செய்வதால் கிராமம் இருளில் மூழ்கும். இதை சரி செய்ய மின் வாரிய ஊழியர் ஒருமுறை வந்திருக்கிறார். டிரான்ஸ்பார்மரை சுற்றி முட்புதர் மண்டி கிடந்தது. தான் ஒரு ஆளாய் அதை சரிசெய்ய முடியாது என்பதால் கூடுதல் ஆட்கள் வேண்டும் என்பதை அதிகாரிகளிடம் தெரிவிக்க வசதியாக புதரை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்.
படம் சரியாக பதிவாகியிருக்கிறதா என்று பார்த்தவர் வெலவெலத்துப் போனார். முகம் வியர்த்தது. உடல் நடுங்கியது. காரணம்.. அதில் மங்கலான உருவம் ஒன்று பதிவாகியிருந்தது. அதுவும் பெண் உருவம். புதரை திரும்பிக்கூட பார்க்காமல் வேகவேகமாக அங்கிருந்து புறப்பட்டார். பதிவான படத்தை கிராமத்தினரிடம் காட்டினார். அது கன்னிப்பேய்தான் என்று தீர்க்கமாக நம்பிய மக்கள் பயத்தில் உறைந்தனர்.
பொழுது சாய்ந்த பிறகு வெளியில் நடமாடுவதை குறைத்தனர் மக்கள். ‘‘நிராசையோட செத்துப்போன ஒரு கன்னிப்பெண் பேய், சுடுகாட்டு புளியமரத்தில குடியிருக்குது. அதனால் அந்த மரத்து பக்கம் நாங்க போறதே இல்ல. சமீபத்துல, செல்போன்லயும் அந்த பெண் உருவம் பதிவாகியிருக்கு. அதை பார்த்தாலே குலை நடுங்குது’’ என்று பயம் மாறாமல் சொல்கிறார்கள் கட்டனாச்சம்பட்டி கிராமத்தினர்.
கிராமத்தில் சிலர் வேறு மாதிரி கூறுகிறார்கள். ‘இந்த பகுதியில் கொல்லிமலை சித்தர் சோமானந்த மகரிஷி பிரபலமாக இருந்தார். கட்டனாச்சம்பட்டி இடுகாட்டில்தான் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்னும் அங்கே இருக்கிறது. அதில் இருந்து அடிக்கடி சித்தர் வெளியே வந்து உலவுவது வழக்கம். அப்படி உலவிய சித்தரின் உருவம் செல்போனில் பதிவாகியிருக்கிறது. அந்த உருவம் கன்னிப் பேய் அல்ல.. சோமானந்த சித்தர்’ என்கிறார்கள் அவர்கள். மர்ம உருவம் கன்னிப் பேயா.. சித்தரா..? கிராமத்தில் நீடிக்கும் மர்மம் ஊர் மக்களை கிலியில் ஆழ்த்தியிருக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
இயற்கை உபாதையை கழிக்க, அந்த பெண் புதர் மறைவில் ஒதுங்கி இருப்பார். மின் வாரிய பணியாளர், செல்போனை பய உணர்ச்சியோடு கையாண்டதால், அந்த பெண்ணின் உருவம் கலங்கலாக விழுந்திருக்கும். .இது தான் சார், மேட்டார்.
jai - tiruppur
6/8/2025 -- 0:2:41
பணியாளர் எடுத்த போட்டோ பார்க்கும் போது புதரை எடுத்த மாதிரி தெரியவில்லை ..போஸ் குடுத்த போட்டோ மாதிரி இருக்கு ....