புதுடெல்லி: வெளிநாட்டில் நிதி பெற்று கணக்கு காட்டாத 1142 என்ஜிஓக்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.இந்தியாவில் செயல்படும் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எனப்படும் என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் நிதி பெற்றுக் கொண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே வெளிநாடுகளில் நிதி பெறும் என்ஜிஓக்களை கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருசின்றன. இதனையடுத்து கடந்த ஆட்சியின் போது வெளிநாடுகளில் நிதி பெறும் என்ஜிஓக்கள் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த சூழலில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய மத்திய அரசானது வெளிநாடுகளில் நிதி பெற்று கணக்கு காட்டாத என்ஜிஓக்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக ஒருங்கிணைந்த ஆந்திராவில் செயல்பட்டு வந்த 1142 என்ஜிஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் பெற்று வந்த நிதி குறித்து தங்களது வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் இது போல் வெளிநாடுகளில் நிதி பெற்ற நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட 510 நோட்டீஸ்கள் திரும்பி வந்தன. முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நோட்டீஸ்கள் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 632 நிறுவனங்கள் நோட்டீஸ்களை பெற்ற போதும் உரிய பதிலை அளிக்கவில்லை.
மேலும் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் தன்னார்வ நிறுவனங்களை தடை செய்யும் பட்டியலில் 69 என்ஜிஓக்கள் சேர்க்கப்பட்டன. இதனையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவில் இது போல் முறையற்று செயல்பட்டு வந்த 1142 என்ஜிஓக்களின் உரிமங்களை ரத்து செய்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சு£ர் 31 ஆயிரத்திற்கும் அதிகமான என்ஜிஓக்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.