திருமலை: திருப்பதியில் காரில் கடத்திச்சென்ற இளம்பெண்ணை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த மாநில பாஜ இளைஞரணி செயலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பதி அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசம் (எ) கங்காதரம். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடத்தி வந்துள்ளார். கடந்த 27ம்தேதி இந்த லாட்ஜூக்கு தனது நண்பர் பிரதீப்புடன் பாஜ மாநில இளைஞரணி செயலாளர் விஸ்வநாதம் வந்துள்ளார். அப்போது அவர், நாங்கள் குற்றப்பிரிவு உதவிஆய்வாளர் என கூறியதுடன் அங்கிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்களிடம் இருந்த நகை, பணத்தையும் பறித்துச் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி மீண்டும் அந்த விடுதிக்கு விஸ்வநாதம், நண்பர்களான பிரதீப், ஹேமந்த், தாமோதரர் ஆகியோர் வந்துள்ளனர். அங்கிருந்த ஒரு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் திருப்பதிக்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து விஸ்வநாதம் உள்ளிட்ட 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடத்தப்பட்ட அந்த பெண், அறையில் இருந்த தொலைபேசி மூலம் டயல் யுவர் 100 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு போலீசாரிடம், மாநில பாஜ இளைஞரணி செயலாளர் விஸ்வநாதம் உள்ளிட்ட 4பேர் தன்னை கடத்தி வந்து லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்வதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பிடியில் இருந்த அந்த பெண்ணை மீட்டனர்.இதுதொடர்பாக பாஜ மாநில இளைஞரணி செயலாளர் விஸ்வநாதம் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபசாரம் செய்த கங்காதரரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.