லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது 10 ஆண்டு கால ராணுவ சேவையை வரும் ஜூன் மாதத்துடன் முடித்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனுமான ஹாரி கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார். கடந்த 2007ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து படையில் சில காலம் பணியாற்றினார். இதன்பின்னர் அவருக்கு அபாச்சி போர் ஹெலிகாப்டர் இயக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. கேப்டனாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. கேப்டன் ஹாரி வேல்ஸ் என அவரை சக வீரர்கள் அழைத்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹாரி மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு 2013 ஜனவரி வரை ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதத்துடன் ஹாரி ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அத்துடன் தனது ராணுவ சேவையை முடித்துக் கொள்ள ஹாரி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியன் ராணுவ படையில் ஒரு மாதம் பணி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஓய்வு குறித்து ஹாரி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவம் எனது வாழ்நாள் முழுவதும் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து யோசித்து வருகிறேன். எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை ராணுவம் அளித்துள்ளது என்றார்.இளவரசர் ஹாரி இங்கிலாந்து மன்னர் பட்டத்தை பெற அவரது தந்தை சார்லஸ், மூத்த சகோதரர் வில்லியம்ஸ், அவரது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பிறகு 5ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.