புதிய தமிழகம் பிரமுகர் கொலை பார்வர்டு பிளாக் நிர்வாகி கைது
ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் செயலாளர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் கடந்த 22ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளத்தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் கணேசன் (23), கண்ணன் மகன் விக்னேஷ் (22), சேதுராமன் மகன் பாதாளம் (23), பெரும்பத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (25), தோழப்பண்பண்னையை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கி ஆனந்த் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தக் கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்தைச் சேர்ந்த பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி செயலாளர் சுரேசை கைது செய்ய வேண்டும் என்று பிச்சனார்தோப்பு மக்கள் மற்றும் புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து தெருவில் உள்ள பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். சுரேஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.