மத்திய அரசுக்கு எதிராக தொடர் கண்டன இயக்கம் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பேட்டி
திருப்பூர்: சிஐடியு மாநிலக்குழு கூட்டம் திருப்பூரில் கடந்த 2 நாளாக நடைபெற்றது. கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களை விளக்கி சிஐடியு மாநிலத் தலைவரும், பெரம்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான சவுந்தரராசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதை எதிர்த்து தொடர் கண்டன இயக்கம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் நுழைவாயில்களாக இருக்கும் 12 துறைமுகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். திருப்பூரில் 8 மணி நேரம் வேலை என்பது இல்லை. 12 மணி நேரம், 16 மணி நேரம், 24 மணி நேரம் கூட தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் முன்னணியில் திருப்பூர் உள்ளது. ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு, மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தொழிலாளர் மானியக் கோரிக்கை விவாதிக்கப்படும் சமயத்தில் மாநிலம் முழுவதும் இருந்து தொழிலாளர்களைத் திரட்டி மே மாதம் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும். இவ்வாறு சவுந்தரராசன் கூறினார்.