கோவை மாநகராட்சியில் ரகளை : அதிமுக தந்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் மீது வழக்கு : திமுக புகார் மீது நடவடிக்கை இல்லை
கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டார். இதுசம்பந்தமாக திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர் மீனா லோகுவை அதிமுக கவுன்சிலர்கள் அன்னம்மாள் உள்ளிட்ட சிலர் தாக்கினர். இதில் மீனா லோகுவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் மீனா லோகு அடுத்து மூன்று கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் அன்னம்மாள், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘‘ திமுக கவுன்சிலர்கள் மீனா லோகு, லட்சுமி இளம்செல்வி கார்த்திக் ஆகியோர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கினர்‘ என்று கூறியுள்ளார். இதன்படி உக்கடம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் 2 திமுக கவுன்சிலர்கள் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.இதுபோல் அதிமுக கவுன்சிலர் அன்னம்மாள் உள்ளிட்ட சிலர் தங்களை தாக்கியதாக திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.