மேலூர் அருகே பரபரப்பு : ரூ. 1 கோடி பணம், 500 பவுனுடன் அடகுக்கடைக்காரர் தலைமறைவு
மேலூர்: மேலூர் அருகே 500 பவுன் நகை, ரூ.1 கோடி பணத்துடன் தலைமறைவான அடகுக்கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, மேலூர் அருகே உள்ள அ.வல்லாள பட்டியை சேர்ந்தவர் ராமன் (65). கிடாரிபட்டியில் ஐயப்பா பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். 40 வருடங்களாக அடகு பிடித்து வரும் இவரின் நடவடிக்கைகளை பார்த்த அவ்வூர் மக்கள், ஊர் கணக்கையே இவரிடம் ஒப்படைத்தனர். பணம் கொடுத்தால் முறையாக அதற்கு வட்டி தருவது இவரது பழக்கம். இதனால் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். அவ்வூரை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஒருவர் ரூ.8 லட்சம் வரை கொடுத்து வைத்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் இவர் திடீரென கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரிடம் பணம், நகையை கொடுத்தவர்கள், தொடர்ந்து தேடியவண்ணம் இருந்தனர். இதற்கிடையே கிடாரிபட்டியை சேர்ந்த 19 பேருக்கு ஐகோர்ட் மூலம் இவர் திவால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், நேற்று மேலவளவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தலைமறைவான ராமனிடம், 500 பவுன் நகைகளுக்கு மேல் அடகு வைத்துள்ளதாகவும், ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வைத்துள்ளதாகவும் கிடாரிபட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.