திருவள்ளூர்: உறவினரின் திருமணத்திற்காக சென்ற பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஆதிமூலம். அவரது மகன் தென்னரசன் (45). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர். இன்று காலை திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தனது உறவினரின் திருமணத்திற்கு தென்னரசன், சென்றுள்ளார். பகல் 11 மணியளவில் திருமணம் முடிந்து மண்டபத்துக்கு வெளியே காரில் ஏற வந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.
திடீரென தென்னரசனை மறித்தனர். மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக்கொண்டு தென்னரசனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்த திருமணத்துக்கு வந்தவர்களும் அப்பகுதியினரும் அலறியடித்து ஓடினர். உடனே 6 பேரும் தப்பிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீசார் தென்னரசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது அரசியல் காரணங்களுக்காக நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சி பிரமுகரை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி யில் பரபரப்பு நிலவுகிறது. கொல்லப்பட்ட தென்னரசன் மீது பல வழக்குகள் உள்ளது. இவரது சகோதரர் பாம் சரவணன், பிரபல ரவுடி. இவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.