திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 3 மாதத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நெய் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தினமும் சுவாமியின் அபிஷேகம், பிரசாதங்கள் தயார் செய்ய நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய் திருமலை திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் துறையினர் கொள்முதல் செய்து குடோனில் இருப்பு வைக்கின்றனர். பின்னர் கோயிலுக்கு தேவைப்படும் நெய் 15 நாட்களுக்கு ஒருமுறை அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் குடோனில் இருந்து கொண்டு வரப்படும் நெய் கோயிலுக்கு வருவதற்குள் திடீரென இடையில் மாயமாகி விடுகிறது. தேவஸ்தான அதிகாரிகள், மார்கெட்டிங் துறை அதிகாரிகள், பிரசாதம் தயார் செய்யும் பிரிவு அதிகாரிகள் கணக்கிட்ட பிறகே இந்த நெய் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 110 டின் நெய் மாயமாகி உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட தங்கச்செயின் காணாமல் போனது. இதுபற்றி விசாரணை நடந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீர் வெளியேறும் பகுதியில் செயின் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் செயின் காணாமல் போன சம்பவம் அனைவருக்கும் தெரிந்து விட்டதால் திருடிய நபர்களே மீண்டும் அங்கு வைத்து சென்றதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இச் சம்பவங்களை தடுக்க தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.