தமிழகம் முழுவதும் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
வேலூர்: தமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதிகள் மற்றும் 20 ஆயிரம் பேர் வசிக்கும் மலைபகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்குகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் புதியதாக 118 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் அனுமதி கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் ரூ.100 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டது. இதற்காக தமிழக அரசிதழில் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த பணிகளை 15 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதியதாக 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் சார்பில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக 15 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.