இலங்கை கடற்படை சிறைபிடித்த 20 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக அதிமுக செயலாளர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் 76 மீனவர்களில் 72 பேரை நேற்று இலங்கை அரசு விடுவித்தது. ஆனால் அவர்களது படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை. தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீனவர்களின் 71 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அவர்களது படகுகள் சேதமடைவதற்கு முன்பாக விரைந்து படகுகளை விடுவிக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது அவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் கடந்த செப்டம்பர் 29ம் தேதி 4 விசைப்படகுகளில் கோட்டைபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அட்டூழியமாக தடுத்து நிறுத்தி அவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பாக் ஜல சந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் உரிமைகளை தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியமாக தடுத்து வருகிறது.எனவே தற்போது இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், அவர்களது 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.