சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் வலுக்கிறது
ஹாங்காங்: தெற்கு ஆசிய பகுதியில் உள்ள ஹாங்காங் நகரம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கடந்த 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது சீன அரசால் நியமிக்கப்பட்ட லெங் சுன் யிங், ஹாங்காங் நகரின் தலைமை நிர்வாகியாக உள்ளார். சீனா சமீபத்தில் ஹாங்காங் நகர தேர்தல் முறைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் 2017ல் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீன அரசு நியமிக்கும் குழுதான் முடிவு செய்யும் என்றும் அறிவித்தது. இதற்கு ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தங்களுக்கு ஜனநாயக அடிப்படையில் முழு சுதந்திரம் வேண்டும். தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஹாங்காங் நகர தலைமை நிர்வாகி பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரினர். இதை அவர் நிராகரித்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலைகளை மறித்தும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் சாலைகளிலேயே அமர்ந்து தங்கள் பாடங்களை படித்தனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க கலவர தடுப்பு போலீசார் மிளகுத் தூள் ஸ்பிரே அடித்தனர். மாணவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மேலும் பலர் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.