காற்றாலை மின் உற்பத்தி சரிவு: குமரியில் மீண்டும் மின்வெட்டு
நாகர்கோவில்: காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக, குமரி மாவட்டத்தில் மீண்டும் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காற்றாலை மின் உற்பத்தி கை கொடுத்ததால் மின் வெட்டு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தினமும் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. தலா 2 மணி நேரம் கணக்கிட்டு ஒரு நாளைக்கு 2, 3 தடவை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது கோடை போல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மின் நுகர்வு அதிகரித்த நிலையில், தேவையை சமாளிக்க மின் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
படிப்படியாக குறைந்து வந்த காற்றாலை மின் உற்பத்தி கடந்த ஒரு வாரமாக முற்றிலும் குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 100 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி கடந்த இரு நாட்களில் வெறும் 25 மெகா வாட் ஆக குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் மின் வெட்டு அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றார். நவராத்திரி விழா, தீபா வளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் வர உள்ள நிலையில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பது வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மின் வெட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.