கடலூர்:கடலூர் அருகே கண்டகாடு கடற்கரை கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் நிலத்தில் அறுவடையின் போது 6 அடி உயர மரவள்ளி கிழங்கு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கண்டகாடு கிராமத்தில் சுப்பிரமணியன் என்ற முன்னாள் ராணுவ வீரர் தன் நிலத்தில் மரவள்ளி பயிரிட்டிருந்தார். அறுவடை காலம் நெருங்கிய நிலையில் நேற்று பண்ருட்டியை சேர்ந்த மரவள்ளி வியாபாரி தொழிலாளர்களுடன் சுப்பிரமணியன் தோட்டத்தில் மரவள்ளி அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செடி மண்ணை 3 அடிக்கு தோண்டி பிடுங்கிய போதும் பூமியை விட்டு வரவில்லை. விவசாயிகள் மேலும் 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, மரவள்ளி கிழங்கு செடி பூமியை விட்டு வெளியே கிழங்குடன் எடுக்கப்பட்டது.
செடியில் விவசாயிகள் ஆச்சரியப்படும் ஏற்படுத்தும் வகையில் 6 அடி நீளத்துக்கு மரவள்ளி கிழங்கு இருந்தது. இதை கேள்விப்பட்டு சுற்றுப்புற கிராமத்தினர் ஆச்சரியத்துடன் 6 அடி உயர மரவள்ளி கிழங்கை பார்வையிட்டு சென்றனர். மரவள்ளி கிழங்கு வியாபாரி சிவபாலன் கூறும்போது, இது வரை 20 ஆயிரம் டன்னுக்கு மேல் மரவள்ளி அறுவடை செய்துள்ளேன். ஆனால் இவ்வளவு உயரமான மரவள்ளி கிழங்கை பார்த்ததில்லை. மண்ணின் வளம் இதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கமாக இரண்டரை அடி நீளத்துக்கு மரவள்ளி அறுவடை செய்யப்பட்டாலே ஆச்சரியமான விஷயம். ஆனால் 6 அடி என்பது அதிசயம் என்றார்.